Wednesday 12 April 2017


வேப்பம்பூ வாசம்


வேப்பம்பூ வாசம்
            மாசி மாதம் நமக்கு வசந்த காலம். ஆனால் வெய்யில் தகிக்கிறது. இது மனிதன் கானகங்களைக்கொன்றதால் ஏற்பட்ட தீமை. இந்த மாதத்தில் மரங்கள் பூக்களை வர்ஷிக்கின்றன, பூக்காத தாவரங்களெல்லாம் தை மாதக்குளிர் முடிந்ததும், ஆதவனின் கரங்களின் சற்றே சூட்டினால் மலர்களை மலர்த்துகின்றன. இந்த வருஷம் அனல் பறக்கும் வெய்யில் இருக்கும் என்பது மாசி ஆரம்பத்திலேயே தெரிகிறது அல்லவா? மரங்களைக்கொன்று ஊர் சமைத்து, தார் சாலை உருவாக்கி, குளங்களைத்தூர்த்து கட்டிடங்களைக்கட்டியதின் விளைவு நமக்கு கண் கூசும் வெய்யில். நீரற்ற கொடுமை. மனிதனை கடவுள் ஏன் படைத்தானோ தெரியவில்லை. எண்ணைச்சட்டியில் இட்டு வறுப்பது போல வெய்யிலின் தாக்கம். இந்த கால கட்டத்தில் பலவித மலர்களை மலர்த்துவது இன்னும் அந்தக்கால வசந்த காலத்தைப்பறை சாற்றுவது போலிருக்கறது என்றே நினைக்கிறேன்.

இவன் வைத்து, இறை அருளால் வளர்ந்த வேப்ப மரங்கள் தகிக்கும் வெய்யிலில் நிழல் தந்து, தனது குறு வெள்ளை மலர்களை மலர்த்தி காற்றில் அசைந்தாடுகின்றன. மக்கள் இவன் வைத்து வளர்த்த மரங்களுக்கு கீழ் கார்களை நிறுத்துகின்றனர். கார் நிறுத்த வீட்டில் இடவசதி இல்லாதவர்கள் ஏன் தான் கார் வாங்குகிறார்களோ! பேராசை யாரை விட்டது? மரங்கள் புத்தம் புது இலைகளைப்போர்த்திக்கொள்ள இலைகளை உதித்துவதை யாரும் கண்டு கொள்வதில்லை. அடியேன் உதிர்ந்த இலைகளை இடுப்பு நோக அள்ளி ஓரிடத்தில் கிடத்தி விடுகிறேன். இவன் விவசாயி இல்லை. மக்கவைத்து உரமாக்கலாம் எனில் அது இவனால் ஆகாத காரியம். காய்ந்த இலை, தலைகளுக்கு நெருப்பு வைக்கலாமெனில் என்னேரமும் சில கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. அவரவர் வசதிகளை பார்த்துக்கொள்கின்றனர். மரம் எப்படி வளர்ந்தது, அதற்கு நாம் என்ன செய்தோம் என்பதை யாரும் லவலேசமும் நினைப்பதில்லை. ஆதாயமனிதன் எதையும் ஆதாயமாக்கிக்கொள்கிறான். எங்கிருந்தோ எல்லாம் புது முகங்கள், புதுப்புதுக்கார்களை இவனையோ, என் பகுதி மக்களையோ சட்டை செய்யாமல் நிறுத்தி விட்டுச்செல்கிறார்கள். வேப்பமரத்தில் தொங்கிச்சிலும்பும் பூக்களை உகாதிப்பண்டிகைக்கு ஸ்கூட்டரின் மீது நின்று தனக்கு உரிமைப்பட்ட மரம் போல பலவந்தமாகப்பறிக்கின்றனர். வேப்பம்பூவாசம் ‘கம்’மென்று மணந்து மூக்கை நிறைக்கிறது. மாலைப்பொழுதிலும், காலைப்பொழுதிலும் வாசனை அப்படியே என்னை மயக்குகிறது. இவன் கையால் வைத்து வளர்த்து, இறை அருளால் ஊக்குவித்த வேம்பு மரங்களின் நன்றியையும், தனது மகிழ்வான சுகந்தத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்கிறது. இதை மற்றைய மக்கள் உணர்கிறார்ளோ எனத்தெரியவில்லை. அதிகாலை என்னை எழுப்புவது கூட வேப்பம்பூ வாசம் தான். இதை எனக்காகவும் என்னுள் உறையும் இறைவனுக்காகவும் எழுதி வைக்கிறேன். மற்றவர் படித்து ரசிக்காவிட்டாலும் இந்த ஆன்மனுக்கு ஏது மில்லை. ஸர்வம் சிவமயம்.

Sunday 5 March 2017




இலையுதிர் காலம்


இலையுதிர் காலம்
                இலையுதிர் காலம், வசந்தத்திற்கு முகமன் கூறும் காலம். பெரும்பாலான மரங்கள் பழைய சொக்காய்களைக்கழற்றிப்போட்டு விட்டு, புதுச்சொக்காய்களைப்போர்த்திக்கொள்ளும் காலத்தின் அரிகுறி. நம் தலையிலிருந்தும் அவ்வப்போது முடி கொட்டுகிறது. காலனி வாசிகள் இலையுதிர்க்கும் மரங்களைப்பார்த்து முகம் சுழிப்பது அழகல்ல. வாழ்நாளில் நீங்கள் எத்தனை குப்பை போடுகிறீர்கள்! மரம் உதிர்க்கும் இலைகள் மண்ணுக்கு உரம். நீங்கள் போடும் பிளாஸ்டிக் உட்பட அனைத்தும் மண்ணுக்கு உரமாகுமா? மாசி மாதம் இலையுதிர்காலம். தை என்றால் தரையும் நடுங்கும். குளிர் விடும் காலம் மாசி மாதம். மாசிக்கடைசியில் தளிர்கள் விட, வசந்த காலம் ஆரம்பம். ஆம்! பங்குனி காலம் தான் நமக்கு வசந்த காலம். ஆனால் மரங்களை வெட்டித்தள்ளி விட்டபடியால், அது வெய்யில் கொழுத்தும் கோடை காலம் ஆகிப்போயிற்று. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி என்னவானதென்றால், வெய்யில், மிக வெய்யில், உக்கரமான வெய்யில் என வெப்பகாலமாகிப்போனது.
நீர் நிலைகள் அழிக்கப்பட்டு பஸ் ஸ்டேண்ட் முதற்கொண்டு கோர்ட் வரை அரசே உதாரணகர்த்தாவாகிப்போய் குளிர்ச்சி குறைய நாமெல்லாம் அக்னி குண்டத்துக்குள் இருப்பது போல பூமியில் வாழ்கிறோம். போதாக்குறைக்கு குளிர் சாதனப்பெட்டி மாட்டி வெளியில் வெப்பத்தை மிகைப்படுத்துகிறோம். மரங்களும், நீர் நிலைகளும் இல்லாமல் போய்,ஜனப்பெருக்கத்தின் சூடு, RCC கட்டிடங்களின் சூடு, வாகனப்பெருக்கம் என ஆகிப்போய் பருவத்திற்கு மழையில்லை. பருவ மழை அற்றுப்போய் விட்டதற்குக்காரணம் மனிதன். கடவுள் மனிதனை ஏன் படைத்தார்?எந்த உயிரும் இயற்கையை மனிதனைப்போல நாசம் செய்வதில்லை. அதுஅதன் நிலையில் உள. மனிதன் கையில் குரங்கு கையில் பூமாலை போல இந்த பூமி அகப்பட்டு, சீரழிந்து கொண்டிருக்கிறது. வெறித்தனமாக பணத்தைக்குவிக்க பூமியைக்கூறு போட்டு விற்கிறான். பூமியை துளைத்தெடுக்கிறான், மணலை அள்ளுகிறான். நீரை மாசு படுத்துகிறான். காற்றை மாசு படுத்துகிறான். குப்பைகளை டன் கணக்கில் விசிறி விடுகிறான். எந்த விலங்கும் தேவைக்கு மேல் பூமியைச் சுரண்டுவதில்லை.
இந்த வருஷம் 1 அல்லது 2 டிகிரி வெப்பம் கூடும் என அறிவிப்பு. அது நிகழ்கிறது. பருவ மழையைத்தொலைத்து விட்டு, எப்போவாது புயல் வரின் மழை வருகிறது. நீருக்கு விலை நிர்ணயித்துவிட்டோம். காற்றுக்கு? எப்போது திருந்தப்போகிறோம். மழையைத்தொலைத்தது போல வசந்தகாலத்தை எப்போதோ தொலைத்து விட்டோம். மாசி கடைசி, பங்குனி மாதங்கள் வசந்தமாக இருந்தது, கோடை காலமாகிப்போனது நமது முட்டாள் தனமான வாழ் முறையால் தான் எனச்சொன்னால் அது மிகையல்ல.

Saturday 7 January 2017






மாடப்புறாக்கள்
மாடங்களில் வசிக்கும் மாடப்புறாக்கள் பல சமயம் அலுவலக குளிர் சாதனப்பெட்டிகளின் மேலே வசிக்கின்றன. மாட வாசிகள் மாடப்புறாக்களைப் பலர் ரசிப்பதில்லை. அதன் கம்பீர நடையும், கொட்ரு, கொட்ரு ஒலியும், பளபளக்கும் கழுத்தும் யார் பார்த்து ரசிக்கிறார்? எச்சமிடுகிறது! மழைபெய்துவிட்டால் அந்த எச்சத்தோடு கலந்து விட்ட வாசனை குமட்டுகிறதே! எனப்பலர் புறாக்களை விரும்புவதில்லை. சூலூரில் ஒரு கடையில் புறாக்களை கூண்டிலடைத்து விற்பனை செய்யப்படுகிறதைப்பார்த்தேன். அவை உரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றனவா அல்லது வளர்த்தப்பட வாங்கப்படுகின்றனவா எனத்தெரியவில்லை. மனிதன் எதைத்தான் உண்ணவில்லை.?
ராஜஸ்தானில் பல இடங்களில் புறாக்களுக்கு தானியம் இரைக்கின்றனர். புறாக்கள் பறக்கும் அழகும், அதன் கம்பீரமும் மனதை மயக்கும். அவை ஒரு சேரப்பறக்கும் விதம், தானியம் எடுக்க இறங்கும் விதம் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அதிகாலை கதிரவன் வழுவாக இருந்தால் அதன் கிரணங்களில் புறாக்கள் பறக்கும் போது ஜ்வலிக்கம் அழகுக்கு ஈடாக எதையும் தரலாம்.எனது மச்சான் தனது நண்பரின் அடுக்கு மாடிக்குடியிருப்பைக்கவனித்தும், அங்கேயே ஒரு குடியிருப்பில் வாழ்ந்தும் வருகிறார்.
ஒரு நாள் ஆதவன் அஸ்தமன நேரத்தில் மச்சான், எனது தம்பி, நான் மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மாடப்புறாக்கள் அங்கு பறந்து வந்து, அமர்ந்தும், நடந்தும், குதித்துக்கொண்டிருந்துமிருந்தன. நான் சூர்ய அஸ்தமனத்தோடு அவற்றை ரசித்துக்கொண்டிருந்தேன். சில இடங்களில் அவற்றின் எச்சங்களிருந்தன. எனது தம்பி ஒரு யோசனை சொன்னது என்னை வியப்பிலும், வெறுப்பிலும் ஆழ்த்தியது. மாடப்புறாக்கள் பயந்து மொட்டை மாடிக்கு வராமலிருக்க, உபயோகித்த CD- க்களை கட்டித்தொங்கவிட்டால் அவை வராமல் தடுக்கலாம் என்றான். மச்சானும் அதை ஆமோதித்தார்.
மாடப்புறாக்களை ஏன் வெறுக்கிறார்கள்?அவைகளை அனுசரித்தால் முட்டை கூட வைத்து குஞ்சு பொரிக்கும். பல நூற்றாண்டுகளாக மனிதனும் புறாக்களும் ஸ்நேகம் என்பது சொல்லித்தெரிவதில்லை. கடிதம் எடுத்தச்செல்ல, போட்டிகள் நடத்த எனப்பிணைப்பு இருந்தது. இப்போது?

Saturday 3 December 2016


சிட்டுக்குருவிகள் அடைதல் (Roosting of Sparrows)

Three Neem Trees wherein House Sparrows Roosting


          சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் வெகுவாகக் குறைந்து விட்டன. செல்போன் கோபுரங்களுக்கும் இந்தக் குறைவுக்கும் சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் மாலை நேரமானால் என் ஊரான சூலூரில் பஸ் நிறுத்தத்துக்கு வெகு அருகில் உள்ள மூன்று செல் போன் கோபுரங்களுக்கு  பக்கத்தில் உள்ள மூன்று வேப்ப மரங்களில் வந்து அடைகின்றன. எல்லாக்குருவிகளுமே வடக்குப்புற பழைய ஊரிலிருந்து வெகுவேகமாகப்பறந்து வருகின்றன. ஞாபகம் வைத்து வெகு கச்சிதமாக தினம் இரவில் தங்கும் மரத்தை அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒன்றிரண்டு கூட்டமாகவும் பறந்து வந்து மரத்தில் அடைவதற்கு முன்னம் ஜமுக்காளம் போல பஸ் ஸ்டேண்ட் மேல் வானில் ஒரு சேரப்பத்து நிமிஷம் முன்னும் பின்னும் பறந்து பின்பு வேப்ப மரத்தில் அடைகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் ஊரின் தெற்குப்பகுதியில் இருந்து வருவதே இல்லை. தெற்குப்பகுதியில் புதிய RCC வீடுகள், வடக்குப்பகுதியில் ஓட்டு வீடுகள் மற்றும் சந்தை, குறுகலான வீதிகள்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஊர்க்குருவிகளுக்கு உணவு கிடைக்க வழிவகுக்கும் அமைவு ஊரின் வடக்கில் உள்ளது. தெற்கில் எல்லாம் காங்கிரிட் ஜங்கிள் அதாவது மண்ணற்ற சிமெண்ட் வீடுகள்.  ஊர்க்குருவிகளுக்கு, பஸ் ஸ்டேண்ட் போல மக்கள் சந்தடியும் தேவை என நிருபணமாகிறது. சூலூரில் மட்டுமல்ல, உடுமலைப்பேட்டையில் இதே போல பஸ் ஸ்டேண்டில் உள்ள மரங்களில் ஊர்க்குருவி அடைதலைப்பார்த்திருக்கிறேன். பொள்ளாச்சியில் ஒரு பழைய பெட்ரோல் பங்க் அருகில் ஐனநடமாட்டம், வண்டிகள் அடிக்கொரு தரம் போகும் சாலையோரம் உள்ள ஒரு குட்டை மரத்தில் அடைவதைப்பார்த்திருக்கிறேன். பொதுவாக இப்போது உருவாகியுள்ள நகரம் ஊர்க்குருவிக்கு நரகம். கூடுகட்ட தாழ்வாரம், கூரைகள், ஓட்டுவீடுகள், பொந்துகள், புழுப்பிடிக்க மண்ணன்டிய கொல்லைப்புறங்கள், முற்றங்கள் இல்லவே இல்லை. சாக்கிலிருந்து சிந்தும் தானியங்களும் இல்லை. ராஜபோகமாக அரிசி உணவில் வாழும் மக்கள் தானியங்களை விரும்பாது போக, ஊர்க்குருவிகளும் மனிதனோடு இப்போதெல்லாம் நேசம் கொண்டாடுவதில்லை. அக்காலங்களில் திண்ணையிலும், வாசலிலிலும் நம்மை வந்து நலம் விசாரிக்காமல் போகாது. கிச்….கிச்..கி..கி….. ஒலி நம்மைவிட்டு தொலைந்து போனது. ஊர்க்குருவி தத்தித்தத்தி வரும் அழகை ரசிக்க இப்போது வாய்ப்பு அறவே இல்லை. நம்முடைய சுகபோக வாழ்க்கையில் எளிமையான பரவசங்களை இழந்து விட்டோம். 

Wednesday 9 November 2016



புலம் பெயர்ந்த முத்தக்கோணாம் பாளையம்
            இந்த கிராமம் அழிந்து பட்டு விட்டதாக என் மூத்த தோழர் பழனிக்கவுண்டர் சொல்லத்தெரிந்து கொண்டேன். செஞ்சேரி மலை கிராமத்துக்கு மரக்கன்றுகளைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்ற போது சொன்னார். இந்த அழிந்த கிராமம் செலக்கரிச்சல் கிராமத்துக்கும், புளியமரத்துப்பாளையத்துக்கும் இடையே வருகிறது. கிராமம் இருந்ததற்கான எந்த விதத்தடயமும் இல்லை. ஒரே ஒரு கூரையற்ற சின்னக்கோயில், இரண்டடி மண்மேட்டில் தார்சாலையோரமாக இருந்தது. நின்ற கோலத்தில் ஒரு கற்ச்சிலை கண்ணைக்கவர்ந்தது. மரங்களோ, வீடுகள் இருந்ததற்கான தடயங்களோ அறவே இல்லை.
இந்த கிராமத்தைத்தாண்டி இரண்டு கி.மீ பக்கமே உள்ள புளியமரத்துப்பாளையம் ஒரு பெரிய ஆல விரக்ஷத்துடனும், ஒரு கோயிலுடனும் தொடங்கி, கிராமம் உள் வாங்கியிருந்தது. நான் செலக்கரிச்சல் கிராமத்தின் நூலக வளாகத்தில் வேலை வாய்ப்பு சம்பந்தமாக பட்டதாரிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது, புளியமரத்துப்பாளையத்திலிருந்து ஒரு ஒல்லியான உடல் வாகு கொண்ட பெண் சைக்கிளிலேயே வந்திருந்தாள். அந்த ஆலமரத்துக்குக்கீழே ஒரு எருமை கட்டப்பட்டு காணப்பட்டது. அங்கு அமர்ந்திருக்க ஒரு மனலயமான அமைதி கிட்டியதை உணர்ந்தேன்.மை போன்ற நிழல், மரத்தண்டு போல விழுதுகள். அங்கும் என் மனதிலும் பேரமைதி நிலவக்கண்டேன்.
முத்தக்கோணாம் பாளையம், யாதவர்கள் அதாவது கோனார்கள் இருந்த கிராமம் எனப் பழனிக்கவுண்டர் சொன்னார். மூத்தக்கோனார் பாளையமாக இருந்தது முத்தக்கோணாம் பாளையமாக மாறியிருக்கும், என்றே நினைக்கிறேன். இவர்கள் தொழில் ஆடு மேய்ச்சலாக இருந்திருக்க வேண்டும். மழை வெறுத்து நிற்க மேய்ச்சல் நிலமற்றுப்போக இந்த கிராமத்து மக்கள் வெளியேறியிருக்க வேண்டும்.சொந்த பூமியைவிட்டு எவர் வெளியேறினாலும் கணத்த இதயத்துடன் தானே போவார். இந்தக்கூரையற்ற இரண்டடிமேட்டுக்கோயிலையும், சுற்றியுள்ள அத்துவான கரட்டு வெளியையும் கண்ணுறும் போதே எனக்கே மனதைப்பிசைந்த்து. மனைவி, குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து, சுகித்துப் புரண்ட இடத்தை விட்டு புலம் பெயரும் போது கண்ணீர் கண்களைத்திரையிடத்தானே செய்யும். நீரின்றி உயிர்கள் ஏது?


Wednesday 26 October 2016




 திருமாண்டகவுண்டன் பாளையம் முத்து


தொரட்டி மரம்

முத்துக்குமாரசாமி


            முத்துக்குமாரசாமி பெயருக்குத்தகுந்த மாதிரி முத்தானவர் தாம். மனித ஆற்றல் செயல் வீரர் பட்டியலில் முன்னதாக உள்ளார். இவரது கிராமத்துக்கு சூலூரிலிருந்து 20.09.2016 அன்று வழியில் உள்ள கிராமமான செலக்கரிச்சலில் வாழும் 86 வயது பழனிக்கவுண்டர் எனும் மரஅன்பரை ஸ்கூட்டரில் பின் புறம் ஏற்றிக்கொண்டேன். இவர் 20 வருஷங்களுக்கு முன்பு அவர் கிராமத்தில் ஆயிரம் மரங்கள் வளர்த்த பெருமை கொண்டவர். புளியமரத்துப்பாளையம், சந்திராபுரம் என தார்ச்சாலையில் வளைந்து, வளைந்து பறக்கும் பறவையைப்போல மேடு, பள்ளமான சாலைகளில் பறந்தோம். காற்றாலைகள் காற்றில் பர்ரு, பர்ரு என ஒலி எழுப்பி சுழன்று கொண்டிருந்தன. ஏமாற்றிப்போன தென்மேற்குப்பருவமழையை சபித்தவாறு காய்ந்துபொறுமிப்போன பூமி, ஆடுகளின் கண்களுக்குக்கூட பசுமை தெரியாத ஒரு வெங்காஞ்ச மண்ணாய்க்கிடந்தது.
 வாய் பிளந்த கண்மாய்கள் மேகம் நீர் ஊற்றுமா என ஏங்கிக்கிடந்தன. சென்ற வழியில் கண்ணில் பட்ட மல்லேகவுண்டன் பாளையம் கிராமம் நீரிருந்தால் இன்னும் அழகாக இருக்குமே என எண்ணிக்கொண்டேன். கண்மாயின் மேடுகளில் வரிசையாக நின்ற புளிய மரங்கள், இடது புறம் பெரிய ஊறணி, சிறுவர் பள்ளி, நூலகம் என அமைதியின் இழையில் பின்னப்பட்டதாய் மனதை மகிழ்ச்சி கொள்ளச்செய்தன. வழிதவறி, வடக்கே ஊத்துக்குளி கிராமத்துக்குச்சென்று, அங்கு எங்களுக்கு வழி சொல்லத்தெரியாத தாதா காலத்து ஆலமரத்தைச்சந்தித்தது, சந்தோஷம் கொள்ள வைத்தது.அப்போது மொபட்டில் வந்தவர் வழி சொல்ல, திருமாண்ட கவுண்டன் பாளைத்துக்குள் நுழைந்தோம்.
கிராமத்தின் முகப்பிலேயே ஒரு யுவன் சாலையோர மரக்கன்றுகளுக்கு நீரூற்றிக்கொண்டிருந்தான். வனம் இந்தியா பவுண்டேசன் வழங்கிய டாங்கர் வண்டி நின்றிருக்க, அதிலிருந்து நீர் வார்க்கும் குழாய். கிராமம் என்று கூட சொல்ல முடியாத குக்கிராமம். கண்மாய். கோயில் , கிராமசாலைகள், என எங்கு பார்த்தாலும் மரக்கன்றுகள். பிளாஸ்டிக் வலை ஆடு, மாடு கடிக்காமல் இருக்குமாறு வைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு எதிரில் உள்ள வற்றிய சின்னக்குளத்துக்கரைகளில் பழமையான அரசன், மற்றும் ஆல். மயானத்தில் இனிமேல் தான் மரக்கன்றுகள் வைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை.
குக்கிராமத்தின் வளைவில் ஒரு இச்சி மரம். அங்கிருந்து பார்க்க, ஒரு மதிய வயது ஜோடி இளைப்பாறிக்கொண்டிருந்தது. கோயிலுக்கு இடது புறம் ஒரு முன்னூறு வருஷம் பழமையான தொரட்டி மரம் இருக்க, அதைச்சுற்றி மேடை. தொரட்டி மரத்தின் அழகு என்னைச்சொக்க வைத்தது. ஒரு அழகிய பச்சைச்செண்டு போல இருந்தது. அந்த மேடையில் இரண்டு பெரிசுகள் ஆண், பெண் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். மதிய வேளையல்லவா!  பெரியவரிடம் பேச்சுக்கொடுத்ததில்
திரு. முத்து, கிராமத்துக்கு செய்யும் சேவையை உளமாறப்புகழ்ந்து பேசினார். நாங்கள் போன போது முத்து சார் இல்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இவரது சேவையை அருகாமையிலுள்ள புளியம் பட்டி, மல்லேகவுண்டன் பாளையம் கிராமங்களில் இளைஞர் அமைப்பை ஏற்படுத்தி விரிவு படுத்த உள்ளாராம். வடகிழக்குப்பருவ மழை இறங்கி வந்தால் இவரது ஆற்றல், மரங்கள் வாயிலாக மேலும் மிளிரும்.

Tuesday 25 October 2016

பறவைகளின் உலகம்

Sunday, October 2, 2016


செஞ்சேரி 


வனம் இந்தியா பவுண்டேசன் உபயத்தில் மரங்களுக்கு நீர்

நூறு நாள் வேலை வாய்ப்பு பெண் தொழிலாளர்களிடையே திரு. நடராஜ் உரை.


செஞ்சேரி
            செஞ்சேரி மலைக்கு இன்னொரு பெயர் மந்திரகிரி. தென்சேரி என்பது செஞ்சேரி என மறுவி விட்டது. மலைமேல் வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். மலைப்பாறைகுன்றில் ஒரு சுரங்கம் இருப்பதாகவும், அதில் சிறிது தூரம் போனால் மூச்சடைக்கும். அதற்குமேல் போக முடியாது. இந்த கிராமத்தைச்சுற்றி  திருமூர்த்தி அணைக்கட்டு நீர்க் கால்வாய் வருஷத்துக்கு 35 நாட்களாவது ஓடுவதால் இன்னும் பசுமை அப்பிக்கொண்டுள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் மழையின்னையால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, வாட்டமாகத்தான் உள்ளது. திடீரென ஒரு நாள் வெள்ளிக்கிழமை (2.9.16) செலக்கரிசல் 86 வயதைத்தொட்டும் சுறுசுறுப்பாக வலையவரும் பழனிக்கவுண்டரை என் ஸ்கூட்டர் பின் புறம் அமர வைத்து, அவர் வழிகாட்ட சூலூரிலிருந்து 25 கி. மீ- க்கு அப்பாலுள்ள செஞ்சேரிக்கு பறந்தேன்.
            வழியில் இத்தனை குளம் குட்டைகள் வாயைப்பிளந்து நீருக்காக தவம் கிடக்கின்றனவே என வருத்தமாயிருந்தது. தார் சாலையைத்தவிர நீர் நீச்சல் இல்லாததால் காட்சிகள் அவ்வளவு சோபிக்கவில்லை. தென்னை மரங்களை மிகுதியாகப்பார்க்கிறேன். வழியில் புளியமரத்துப்பாளையத்தில் நூறு வயதான ஆலமரம் விழுதுகளோடு பார்த்து பரவசம் மேலிட்டது. காய்ந்துபோய் பல வருஷங்களான ஒரு பெரிய குளத்துக்குள் ஒத்தையடிப்பாதையில் போய் தார் சாலையில் இணைந்தோம். எனது மூத்த நண்பர் பழனி இருந்ததால், வழி பிசகாமல் சந்திராபுரம்,  வாரப்பட்டி, முத்தக்கோனாம் பாளையம், சுல்தான் பேட்டை வழி காட்டப்பட்டு செஞ்சேரி அடைந்தோம். நல்ல வேளையாக பாதையோரத்தில் வனம் இந்தியா பவுண்டேசனின் பேருதவியால் நடப்பட்ட மரநாற்றுகளுக்கு நீர் வார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த வனம் இந்தியா ட்ராக்டர் டாங்க் வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தினோம்.
            நூறு நாள் வேலை வாய்ப்பில் பணிபுரியும் முதிய மகளிர் குடங்களில் ட்ராக்டர் டாங்க்கில் நீர் பிடித்து பாதையார நாற்றுகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் நாங்கள் சரியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி கொண்டோம். நீர் அருகாமையிலுள்ள கிணறுகளில் ட்ராக்டர் டாங்க்கில் பிடித்து ஊற்றுகிறார்கள். மழைமேகங்கள் ஏன் இப்படி ஏய்க்கின்றன எனத்தெரியவில்லை. கரு மேகங்கள் கூடும் ஆனால் ஒரு சொட்டு மழை தென் மேற்குப்பருவ மழை தராது கஞ்சத்தனமாக இருந்துவிட்டது. மனிதன் ஏய்த்தால், இயற்கையும் ஏய்க்கத்தானே செய்யும். ஐந்து நிமிஷத்தில் இந்தப்புனிதப்பணியை மேற்பார்வையிடும் நடராஜன் அவர்கள் மொபட்டில் வந்து சேர்ந்தார். அங்கிருந்த இன்னொரு நண்பர் பொன்னுசாமி என்பவரை செய்ற்குழு உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வைத்தார்.
            அங்கிருந்து செஞ்சேரி –சுல்த்தான் பேட்டை சாலை, பச்சார் பாளையம், செஞ்சேரி மலை, குமாரபாளையம், வடவேடம்பட்டி, அருகம்பாளையம், குறிஞ்சி நகர், செஞ்சேரி மயானம் என செஞ்சேரி மலையை நோக்கிச்செல்லும் கிட்டத்தட்ட எல்லாச்சாலைகளிலும் மரநாற்றுகள் சாலையோரம் நடப்பட்டு, மூங்கில் கூடைகள் ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாப்பாக இருக்க நாற்றுகளைச்சுற்றி வைத்திருந்தனர். காற்றில் அசையாமலிருக்க குச்சி நட்டிருந்தனர். நானாவித மர நாற்றுகளைப்பார்க்க முடிந்தது. மூவாயிரம் நாற்றுகளுக்கு மேல் நட்டிருப்பதாகச்சொன்னார். 14.9.16-க்குப்பிறகு 35 நாட்கள் திருமூர்த்தி அணைக்கட்டு நீர் கால்வாய்களில் வருவதால் மேலும் மர நாற்றுகள் நட இருப்பதாக நடராஜன் சொன்னார். அண்ணாரது தன்னலமற்ற பணியைப்பாராட்ட வேண்டும். பல உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முன்னின்று செயலாற்றுவது அதுவும் அன்றாடம் நேரம் ஒதுக்கிப்பணிபுரிவது குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது.
            மயானம் காய்ந்து போய் மழையின்மையால் வெப்பம் கொப்பளித்தது. நீர் பற்றாக்குறையிலும் வரிசைக்கிரமமாக நீர் வார்ப்பது சிரமம் தான். தினமும் ட்ராக்டர் டாங்கர் மூலம் தான் மரநாற்றுகளுக்கு நீர் வார்க்க வேண்டியுள்ளது. அதனால் வண்டி தினமும் செஞ்சேரி சாலைகளில் சுற்றிச்சுற்றி வலம் வருகிறது. சொட்டு நீர் இட வழியில்லை. பாதையோர நிழலில் வெய்யிலின் மிகையால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நூறு நாள் முதும் பெண்களை ஒரு வேப்பமர நிழலில் நடராஜன் அவர்கள் கையசைத்து வரச்சொல்லித்திரட்டினார். என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசப்பணித்தார். அருகில் பழனிக்கவுண்டர், இருந்தார். முதலில் நடராஜன் அவர்கள் பேசினார். பிறகு நான் பேசினேன்.

            இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிஷ்நாய் இன மக்கள் ராஜஸ்தானிலும், அதற்குப்பிறகு சிப்காட் நிகழ்விலும் குறிப்பாக பெண் மக்கள் மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். கூடி மரத்தண்டைச்சுற்றி கைகோர்த்து நின்று, முதலில் எங்களை சிரசேதம் செய்து கொன்று விட்டு பிறகு மரத்தின் மேல் கை வையுங்கள் என வெட்டப்பட இருந்த  மரங்களைக்காப்பாற்றினர். அந்த எழுச்சி எங்கு போனது? ஆகவே ஆடு, மாடு கடிக்க விடாமல் காப்பாற்றுங்கள். குடிக்கத்தண்ணீர் நாம் உற்பத்தி பண்ண முடியாது. மழையை வருவிக்க மரங்கள் தேவை, என உரையாற்றினேன். சில மாதங்கள் சம்பளம் வரவில்லை என தாக்கீது செய்தனர், மறுநாளே இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் மாண்புமிகு மந்திரிக்கு மின்னஞ்ல் செய்தேன்.