வேப்பம்பூ வாசம்
வேப்பம்பூ வாசம்
மாசி மாதம் நமக்கு வசந்த காலம். ஆனால்
வெய்யில் தகிக்கிறது. இது மனிதன் கானகங்களைக்கொன்றதால் ஏற்பட்ட தீமை. இந்த மாதத்தில்
மரங்கள் பூக்களை வர்ஷிக்கின்றன, பூக்காத தாவரங்களெல்லாம் தை மாதக்குளிர் முடிந்ததும்,
ஆதவனின் கரங்களின் சற்றே சூட்டினால் மலர்களை மலர்த்துகின்றன. இந்த வருஷம் அனல் பறக்கும்
வெய்யில் இருக்கும் என்பது மாசி ஆரம்பத்திலேயே தெரிகிறது அல்லவா? மரங்களைக்கொன்று ஊர்
சமைத்து, தார் சாலை உருவாக்கி, குளங்களைத்தூர்த்து கட்டிடங்களைக்கட்டியதின் விளைவு
நமக்கு கண் கூசும் வெய்யில். நீரற்ற கொடுமை. மனிதனை கடவுள் ஏன் படைத்தானோ தெரியவில்லை.
எண்ணைச்சட்டியில் இட்டு வறுப்பது போல வெய்யிலின் தாக்கம். இந்த கால கட்டத்தில் பலவித
மலர்களை மலர்த்துவது இன்னும் அந்தக்கால வசந்த காலத்தைப்பறை சாற்றுவது போலிருக்கறது
என்றே நினைக்கிறேன்.
இவன்
வைத்து, இறை அருளால் வளர்ந்த வேப்ப மரங்கள் தகிக்கும் வெய்யிலில் நிழல் தந்து, தனது
குறு வெள்ளை மலர்களை மலர்த்தி காற்றில் அசைந்தாடுகின்றன. மக்கள் இவன் வைத்து வளர்த்த
மரங்களுக்கு கீழ் கார்களை நிறுத்துகின்றனர். கார் நிறுத்த வீட்டில் இடவசதி இல்லாதவர்கள்
ஏன் தான் கார் வாங்குகிறார்களோ! பேராசை யாரை விட்டது? மரங்கள் புத்தம் புது இலைகளைப்போர்த்திக்கொள்ள
இலைகளை உதித்துவதை யாரும் கண்டு கொள்வதில்லை. அடியேன் உதிர்ந்த இலைகளை இடுப்பு நோக
அள்ளி ஓரிடத்தில் கிடத்தி விடுகிறேன். இவன் விவசாயி இல்லை. மக்கவைத்து உரமாக்கலாம்
எனில் அது இவனால் ஆகாத காரியம். காய்ந்த இலை, தலைகளுக்கு நெருப்பு வைக்கலாமெனில் என்னேரமும்
சில கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. அவரவர் வசதிகளை பார்த்துக்கொள்கின்றனர். மரம்
எப்படி வளர்ந்தது, அதற்கு நாம் என்ன செய்தோம் என்பதை யாரும் லவலேசமும் நினைப்பதில்லை.
ஆதாயமனிதன் எதையும் ஆதாயமாக்கிக்கொள்கிறான். எங்கிருந்தோ எல்லாம் புது முகங்கள், புதுப்புதுக்கார்களை
இவனையோ, என் பகுதி மக்களையோ சட்டை செய்யாமல் நிறுத்தி விட்டுச்செல்கிறார்கள். வேப்பமரத்தில்
தொங்கிச்சிலும்பும் பூக்களை உகாதிப்பண்டிகைக்கு ஸ்கூட்டரின் மீது நின்று தனக்கு உரிமைப்பட்ட
மரம் போல பலவந்தமாகப்பறிக்கின்றனர். வேப்பம்பூவாசம் ‘கம்’மென்று மணந்து மூக்கை நிறைக்கிறது.
மாலைப்பொழுதிலும், காலைப்பொழுதிலும் வாசனை அப்படியே என்னை மயக்குகிறது. இவன் கையால்
வைத்து வளர்த்து, இறை அருளால் ஊக்குவித்த வேம்பு மரங்களின் நன்றியையும், தனது மகிழ்வான
சுகந்தத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்கிறது. இதை மற்றைய மக்கள் உணர்கிறார்ளோ எனத்தெரியவில்லை.
அதிகாலை என்னை எழுப்புவது கூட வேப்பம்பூ வாசம் தான். இதை எனக்காகவும் என்னுள் உறையும்
இறைவனுக்காகவும் எழுதி வைக்கிறேன். மற்றவர் படித்து ரசிக்காவிட்டாலும் இந்த ஆன்மனுக்கு
ஏது மில்லை. ஸர்வம் சிவமயம்.