திருமாண்டகவுண்டன் பாளையம் முத்து
| தொரட்டி மரம் |
| முத்துக்குமாரசாமி |
முத்துக்குமாரசாமி பெயருக்குத்தகுந்த மாதிரி
முத்தானவர் தாம். மனித ஆற்றல் செயல் வீரர் பட்டியலில் முன்னதாக உள்ளார். இவரது கிராமத்துக்கு
சூலூரிலிருந்து 20.09.2016 அன்று வழியில் உள்ள கிராமமான செலக்கரிச்சலில் வாழும் 86
வயது பழனிக்கவுண்டர் எனும் மரஅன்பரை ஸ்கூட்டரில் பின் புறம் ஏற்றிக்கொண்டேன். இவர்
20 வருஷங்களுக்கு முன்பு அவர் கிராமத்தில் ஆயிரம் மரங்கள் வளர்த்த பெருமை கொண்டவர்.
புளியமரத்துப்பாளையம், சந்திராபுரம் என தார்ச்சாலையில் வளைந்து, வளைந்து பறக்கும் பறவையைப்போல
மேடு, பள்ளமான சாலைகளில் பறந்தோம். காற்றாலைகள் காற்றில் பர்ரு, பர்ரு என ஒலி எழுப்பி சுழன்று கொண்டிருந்தன. ஏமாற்றிப்போன தென்மேற்குப்பருவமழையை
சபித்தவாறு காய்ந்துபொறுமிப்போன பூமி, ஆடுகளின் கண்களுக்குக்கூட பசுமை தெரியாத ஒரு
வெங்காஞ்ச மண்ணாய்க்கிடந்தது.
வாய் பிளந்த கண்மாய்கள் மேகம் நீர் ஊற்றுமா என ஏங்கிக்கிடந்தன.
சென்ற வழியில் கண்ணில் பட்ட மல்லேகவுண்டன் பாளையம் கிராமம் நீரிருந்தால் இன்னும் அழகாக
இருக்குமே என எண்ணிக்கொண்டேன். கண்மாயின் மேடுகளில் வரிசையாக நின்ற புளிய மரங்கள்,
இடது புறம் பெரிய ஊறணி, சிறுவர் பள்ளி, நூலகம் என அமைதியின் இழையில் பின்னப்பட்டதாய்
மனதை மகிழ்ச்சி கொள்ளச்செய்தன. வழிதவறி, வடக்கே ஊத்துக்குளி கிராமத்துக்குச்சென்று,
அங்கு எங்களுக்கு வழி சொல்லத்தெரியாத தாதா காலத்து ஆலமரத்தைச்சந்தித்தது, சந்தோஷம்
கொள்ள வைத்தது.அப்போது மொபட்டில் வந்தவர்
வழி சொல்ல, திருமாண்ட கவுண்டன் பாளைத்துக்குள் நுழைந்தோம்.
கிராமத்தின் முகப்பிலேயே ஒரு
யுவன் சாலையோர மரக்கன்றுகளுக்கு நீரூற்றிக்கொண்டிருந்தான். வனம் இந்தியா பவுண்டேசன்
வழங்கிய டாங்கர் வண்டி நின்றிருக்க, அதிலிருந்து நீர் வார்க்கும் குழாய். கிராமம் என்று
கூட சொல்ல முடியாத குக்கிராமம். கண்மாய். கோயில் , கிராமசாலைகள், என எங்கு பார்த்தாலும்
மரக்கன்றுகள். பிளாஸ்டிக் வலை ஆடு, மாடு கடிக்காமல் இருக்குமாறு வைக்கப்பட்டிருந்தது.
கோயிலுக்கு எதிரில் உள்ள வற்றிய சின்னக்குளத்துக்கரைகளில் பழமையான அரசன், மற்றும் ஆல்.
மயானத்தில் இனிமேல் தான் மரக்கன்றுகள் வைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை.
குக்கிராமத்தின் வளைவில் ஒரு
இச்சி மரம். அங்கிருந்து பார்க்க, ஒரு மதிய வயது ஜோடி இளைப்பாறிக்கொண்டிருந்தது. கோயிலுக்கு
இடது புறம் ஒரு முன்னூறு வருஷம் பழமையான தொரட்டி மரம் இருக்க, அதைச்சுற்றி மேடை. தொரட்டி
மரத்தின் அழகு என்னைச்சொக்க வைத்தது. ஒரு அழகிய பச்சைச்செண்டு போல இருந்தது. அந்த மேடையில்
இரண்டு பெரிசுகள் ஆண், பெண் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். மதிய வேளையல்லவா! பெரியவரிடம் பேச்சுக்கொடுத்ததில்
திரு.
முத்து, கிராமத்துக்கு செய்யும் சேவையை உளமாறப்புகழ்ந்து பேசினார். நாங்கள் போன போது
முத்து சார் இல்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இவரது சேவையை அருகாமையிலுள்ள
புளியம் பட்டி, மல்லேகவுண்டன் பாளையம் கிராமங்களில் இளைஞர் அமைப்பை ஏற்படுத்தி விரிவு
படுத்த உள்ளாராம். வடகிழக்குப்பருவ மழை இறங்கி வந்தால் இவரது ஆற்றல், மரங்கள் வாயிலாக
மேலும் மிளிரும்.