Saturday, 3 December 2016


சிட்டுக்குருவிகள் அடைதல் (Roosting of Sparrows)

Three Neem Trees wherein House Sparrows Roosting


          சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் வெகுவாகக் குறைந்து விட்டன. செல்போன் கோபுரங்களுக்கும் இந்தக் குறைவுக்கும் சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் மாலை நேரமானால் என் ஊரான சூலூரில் பஸ் நிறுத்தத்துக்கு வெகு அருகில் உள்ள மூன்று செல் போன் கோபுரங்களுக்கு  பக்கத்தில் உள்ள மூன்று வேப்ப மரங்களில் வந்து அடைகின்றன. எல்லாக்குருவிகளுமே வடக்குப்புற பழைய ஊரிலிருந்து வெகுவேகமாகப்பறந்து வருகின்றன. ஞாபகம் வைத்து வெகு கச்சிதமாக தினம் இரவில் தங்கும் மரத்தை அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒன்றிரண்டு கூட்டமாகவும் பறந்து வந்து மரத்தில் அடைவதற்கு முன்னம் ஜமுக்காளம் போல பஸ் ஸ்டேண்ட் மேல் வானில் ஒரு சேரப்பத்து நிமிஷம் முன்னும் பின்னும் பறந்து பின்பு வேப்ப மரத்தில் அடைகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் ஊரின் தெற்குப்பகுதியில் இருந்து வருவதே இல்லை. தெற்குப்பகுதியில் புதிய RCC வீடுகள், வடக்குப்பகுதியில் ஓட்டு வீடுகள் மற்றும் சந்தை, குறுகலான வீதிகள்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஊர்க்குருவிகளுக்கு உணவு கிடைக்க வழிவகுக்கும் அமைவு ஊரின் வடக்கில் உள்ளது. தெற்கில் எல்லாம் காங்கிரிட் ஜங்கிள் அதாவது மண்ணற்ற சிமெண்ட் வீடுகள்.  ஊர்க்குருவிகளுக்கு, பஸ் ஸ்டேண்ட் போல மக்கள் சந்தடியும் தேவை என நிருபணமாகிறது. சூலூரில் மட்டுமல்ல, உடுமலைப்பேட்டையில் இதே போல பஸ் ஸ்டேண்டில் உள்ள மரங்களில் ஊர்க்குருவி அடைதலைப்பார்த்திருக்கிறேன். பொள்ளாச்சியில் ஒரு பழைய பெட்ரோல் பங்க் அருகில் ஐனநடமாட்டம், வண்டிகள் அடிக்கொரு தரம் போகும் சாலையோரம் உள்ள ஒரு குட்டை மரத்தில் அடைவதைப்பார்த்திருக்கிறேன். பொதுவாக இப்போது உருவாகியுள்ள நகரம் ஊர்க்குருவிக்கு நரகம். கூடுகட்ட தாழ்வாரம், கூரைகள், ஓட்டுவீடுகள், பொந்துகள், புழுப்பிடிக்க மண்ணன்டிய கொல்லைப்புறங்கள், முற்றங்கள் இல்லவே இல்லை. சாக்கிலிருந்து சிந்தும் தானியங்களும் இல்லை. ராஜபோகமாக அரிசி உணவில் வாழும் மக்கள் தானியங்களை விரும்பாது போக, ஊர்க்குருவிகளும் மனிதனோடு இப்போதெல்லாம் நேசம் கொண்டாடுவதில்லை. அக்காலங்களில் திண்ணையிலும், வாசலிலிலும் நம்மை வந்து நலம் விசாரிக்காமல் போகாது. கிச்….கிச்..கி..கி….. ஒலி நம்மைவிட்டு தொலைந்து போனது. ஊர்க்குருவி தத்தித்தத்தி வரும் அழகை ரசிக்க இப்போது வாய்ப்பு அறவே இல்லை. நம்முடைய சுகபோக வாழ்க்கையில் எளிமையான பரவசங்களை இழந்து விட்டோம். 

No comments:

Post a Comment